
‘உயிரை பணயம் வைத்து திருட வந்த என்னை ஏமாற்றலாமா..?’ என்று, மளிகை கடைக்காரருக்கு திருடன் ஒருவன் கடிதம் எழுதி வைத்து அதிர்ச்சி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். கடலூர் வீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த முதலாம் திகதி இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.
காலையில் வந்து வழக்கம்போல் கடையை திறந்தபோது, பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது, அரிசி, மைதா, கடலை மாவு மூட்டைகளை பிளேடால் கிழித்து வாரி இறைக்கப்பட்டிருந்தன. அதோடு, கடையின் மேற்கூரையில் இருந்த ஓடுகளும் பிரிக்கப்பட்டிருந்தன.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெயராஜ் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு வந்த பொலிஸார் கடையை பார்வையிட்டனர். அப்போது, கடையில் உள்ள பணப் பெட்டியில் ஒரு கடிதம் இருந்தது. அந்தக் கடிதத்தில், “உயிரை பணயம் வைத்து திருட வந்தால், காசு இல்லாமல் பணப்பெட்டியை துடைத்து வைத்து என்னை ஏமாற்றலாமா..? அதுக்குதான் இந்த குரங்கு வேலை” என எழுதப்பட்டிருந்தது.
இதன் மூலம், கடந்த முதலாம் திகதி இரவு ஜெயராஜ் கடையை பூட்டி விட்டு சென்ற பின்னர், நள்ளிரவில் ஓட்டை பிரித்து கடைக்குள் கொள்ளையன் இறங்கி இருப்பது தெரியவந்தது. வழக்கமாக ஜெயராஜ், கடையில் வசூலாகும் பணத்தை எடுத்து சென்றுவிடுவார் என்பதால், பணப் பெட்டியில் பணம் இல்லை. இது, திருடனுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த திருடன், கடை உரிமையாளருக்கு கடிதம் மூலம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளான். கடிதத்தில் குறிப்பிட்டதை போன்று குரங்கு வேலையாக, அங்கிருந்த அரிசி உள்ளிட்ட மூட்டைகளை பிளேடால் வெட்டி சென்று இருக்கிறான்.
இந்நிலையில், கடிதம் எழுதுவதற்கு பயன்படுத்திய மார்க்கர் அங்கே கிடந்தது. அதில் திருடனின் கைரேகை பதிவாகி இருக்கும் என்பதால், அதைக் கைப்பற்றி பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
திருட வந்த நபர், பணப் பெட்டியில் பணம் ஏதும் இல்லாததால் கடிதம் எழுதிவைத்து விட்டுச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.