
மன்னார் ‘சதொச’ வளாகத்தில் 74 ஆவது தடவையாக இடம்பெறுகின்ற அகழ்வு பணியில் இது வரை 136 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். மன்னார் ‘சதொச’ வளாகத்தில் இன்று மன்னார் மவட்ட நீதவான் ரி.சரவணராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ மற்றும் களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜ் சோம தேவ ஆகியோரின் தலைமையில் 74 ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெற்றுள்ளது.
இது தொடர்பாக சமிந்த ராஜபக்ஸ கருத்து தெரிவிக்கையில், “மன்னார் ‘சதொச’ வளாகத்தில் இன்று 74 ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது. குறித்த வளாகத்தில் இருந்து இது வரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது 136 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதோடு அவற்றில் மீட்கப்பட்ட 130 மனித எலும்புக்கூடுகள் மன்னார் நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. அகழ்வு பணிகளை விரைவு படுத்தும் வகையில் தற்போது அகழ்வு பணியின் போது மேலதிகமாக உத்தியோகத்தர்கள் இணைக்கப்பட்டு அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அகழ்வு பணிகள் இடம் பெறும் தினங்களில் காலை 10.30 மணி தொடக்கம் 11.30 மணி வரைக்கும், மாலை 3.30 மணி தொடக்கம் 4.30 மணி வரைக்கும் ஊடகவியலாளர்கள் அகழ்வு பணி இடம் பெறும் வளாக்ததிற்குள் சென்று தமது கடமையை மேற்கொள்ள முடியும். ஒவ்வெரு புதன் கிழமையும் காலை 10.30 மணி முதல் 11 மணி வரையில் வாராந்த பதிவுகள் ஊடகங்களுக்கு கருத்தாக வழங்கப்படும்.” என தெரிவித்துள்ளார்.