
இலங்கையின் வடக்கே பல திருமணங்களைச் செய்த மணமகன் ஒருவர் வசமாக மாட்டிக்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது..
இதுகுறித்து விரிவாகத் தெரியவருவதாவது,
குறித்த நபர் யாழ்ப்பாணத்தில் ஒரு திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகளுடன் மனைவியை கைவிட்டு, கிளிநொச்சியில் வேறு ஒரு திருமணம் முடித்துவிட்டு அந்தப் பெண்னையும் கைவிட்டுவிட்டு இன்று வவுனியாவில் மூன்றாவது திருமணத்தினை நடாத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டபோதே வசமாக சிக்கியுள்ளார். இதனால் குறித்த திருமணம் நின்றுபோயுள்ளது.
இவ்விடயம் குறித்து அவரின் இரண்டாவது மனைவி தெரிவிக்கும்போது,
”கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் பகுதியில் திருமணம் முடித்து இரண்டு இளம் பிள்ளைகளுடன் அப் பெண்ணை கைவிட்டுள்ளார். இதனால் அப்பெண் வெளிநாடு சென்று தனது பிள்ளைகளைக் கவனித்து வருகின்றார். கடந்த ஒருவருடங்களுக்கு முன்னர் என்னைத் திருமணம் செய்து கொண்டார். இதற்கான ஆதாரங்களும் புகைப்படங்களும் என்னிடம் உண்டு.
தற்போது என்னையும் கைவிட்டு இன்று வவுனியா கூமாங்குளம் பகுதியிலுள்ள பெண் ஒருவரைத் திருமணம் முடிக்க முயற்சிப்பது எனக்குத் தெரியவந்துள்ளது. எனவே இதனைத்தடுத்து நிறுத்தி இவ்வாறான கயவர்களின் முகத்திரையைக் கிளிப்பதுடன் சமூகத்திற்கு இவர்களை அடையாளம் காட்டவேண்டும் என்றே நான் இவ்வாறு துணிச்சலுடன் நடந்துகொண்டுள்ளேன்.
கடந்த வருடத்திலிருந்து என்னுடன் முரண்பட்டுக்கொண்டிருந்துள்ளதுடன் சீதனம் கேட்டு வற்பறுத்தியும் வந்துள்ளார். இவர் பணத்திற்காகவே இவ்வாறு நடந்துகொண்டுள்ளார். இதனால் எங்களுக்கு இருவருக்கும் இடையே கருத்து முரண்பட்டு என்னைக் கைவிட்டுவிட்டுச் சென்ற நிலையிலும் என்னுடன் நேற்று இரவு வரையில் தொலைபேசியில் தொடர்புகளுடனே இருந்துள்ளார்.
இதையடுத்து எனக்குத் தெரிந்தவர்களின் உதவியுடன் இன்று இடம்பெறவிருந்த மூன்றாவது திருமணத்தை அறிந்துகொண்டேன். அதனைத் தடுத்து நிறுத்தும் நோக்குடன் சென்றேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த வருடம் டிசம்பர் மாதம் 22ஆம் திகதி மற்றும் இந்த வருடம் பெப்ரவரி 03ஆம் திகதி ஆகிய தினக்களில் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் குடும்ப வன்முறைகள் இடம்பெற்றுள்ளது என்று முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் நேற்று முந்தினம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஏமாற்றித் திருமணம் முடித்துள்ளதாக முறைப்பாடு ஒன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று காலை கந்தசாமி ஆலயத்தில் இடம்பெற இருந்த திருமணமே ஆலய நிர்வாகத்தினரால் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆலய வளவிலுள்ள திருமண மண்டபத்தில் இடம்பெற்ற திருமணத்திற்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை.
குறித்த நபர் பரந்தன் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராக கடமையாற்றுவதாகவும் இரண்டாவது மனைவி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இன்று இடம்பெறவிருந்த மூன்றாவது திருமணத்தினை ஏற்பாடு மேற்கொண்ட உறவினர்கள் புதுமாப்பிளையான ஆசிரியரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.