
அனுராதபுரம் – மதவாச்சி நகருக்கு அருகில் வைத்து 16 வயது சிறுமியை பலவந்தமாக கடத்த முயற்சித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாய் மதவாச்சி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தக் கடத்தல் முயற்சி இடம்பெற்ற இடத்திலுள்ள சிசிரிவி காட்சிகள் தொடர்பான விசாரணையில் அவ்வாறான சம்பவம் எதுவும் இடம்பெற்றதாகத் தகவல்கள் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சிசிரிவி காட்சிகள்
எவ்வாறாயினும், வீதியில் காணப்படும் ஏனைய சிசிரிவி காட்சிகளை மதவாச்சி பொலிஸார் பரிசோதித்து, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை இன்றைய தினம் (16.05.2023) யாழ். நாவாந்துறை பகுதியில் சிறுவர் ஒருவரை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் அப்பகுதி மக்களால் நபர் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்டு யாழ். பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலும், கடந்த வாரம் மன்னார், முல்லைத்தீவு பகுதியில் பாடசாலை மாணவர்களை வாகனங்களில் கடத்த முயற்சிக்கும் சம்பவங்கள் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.