
வவுனியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் 7 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 9 குடும்பங்களை சேர்ந்த 29 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ஏ.எம்.ஆர்.கே.ரத்நாயக்கே தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தின் சீரற்ற காலநிலை தொடர்பாக இன்று (09.12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலையினால் வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குபட்ட இராசேந்திரம் பகுதியில் மூன்று குடும்பங்களை சேர்ந்த பத்து பேரும், ஆசிகுளம் பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும், மருதமடு பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரும், கல்மடு பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரும் என 6 குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
மேலும் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச பிரிவுக்குட்பட்ட பிரபமடு பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும், அவசலபிட்டிய பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரும், அலகல்ல பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் என 3 குடும்பங்களைச் சேர்ந்த 9 பேரும் பாதிப்படைந்துள்ளனர்.
சீரற்ற காலநிலையால் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவில் மூன்று வீடுகளும், வவுனியா பிரதேச செயலக பிரிவில் நான்கு வீடுகளும் என 7 வீடுகள்பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
மாவட்டத்தில் தொடர்ச்சியாக சீரற்ற காலநிலையுடன் கூடிய காலநிலமை காணப்படுவதினால் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் எதேனும் அனர்த்தம் இடம்பெற்றால் அனர்த்த முகாமைத்துவ நிலையம், பொலிஸ் நிலையம், கிராம சேவையாளர் அல்லது பிரதேச செயலகங்களுக்கு தகவல்களை வழங்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்தார்.