
வவுனியாவிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து மூன்று முதலைகள் வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, குருந்துப்பிட்டி பகுதியிலுள்ள ஒருவருடைய வீட்டுக்கிணற்றிலேயே குறித்த முதலைகள் வீழ்ந்துள்ளன.
ஏழு அடி நீளமான பெரிய முதலை ஒன்றும் மூன்று அடி நீளமான இரண்டு முதலைக் குட்டிகளும் குறித்த கிணற்றினுள் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) மீட்கப்பட்டுள்ளன.
நிலவிவரும் சீரற்ற காலநிலையினால் பெய்துவரும் கடும்மழையின் காரணமாகவே இந்த முதலை வீட்டைத்தேடி வந்திருக்கலாம் என அதிகாரிகள் கூறினர்.
குறித்த முதலைகளை கிணற்றினுள் அவதானித்த வீட்டு உரிமையாளர் அதிர்ச்சியடைந்ததுடன் உடனடியாக அதுகுறித்து அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.
அதனையடுத்து அவ்விடத்திற்கு வந்த வன விலங்குகள் பாதுகாப்புத்திணைக்கள அதிகாரிகள் குறித்த முதலைகளை கடும் முயற்சியின் மத்தியில் மீட்டுச் சென்றதுடன் மடுப் பிரதேசவனத்தில் உள்ள நீரேந்துப்பகுதியில் அவற்றினை விடுவித்துள்ளனர்.